Digital Time and Date

Welcome Note

Wednesday, April 4, 2012

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!












கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது தேசபக்தியை மட்டும்தான். ஆனால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களுக்காக இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல் பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.
மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.
முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.
ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !
ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது.  தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி  மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.
விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.
கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.
மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.
ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !
கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு,  தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.
ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல்  கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.
தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.
மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.
இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து   18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.
“சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.
நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.
ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன்  தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.
நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.
ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.  ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.
ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

No comments:

Post a Comment