Digital Time and Date

Welcome Note

Wednesday, July 25, 2012

ஃபேஸ்புக் பற்றிய 10 முக்கிய ரகசியங்கள்

ஃபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட் வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'Data Mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த திகதியும் இடமும்
இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.
தாயின் கன்னிப் பெயர்
பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.
விலாசம்
நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் (Identity Theft) மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.
விடுமுறைகள்
உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.
வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள்
இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.
முறையற்ற படங்கள்
பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.
ஒப்புதல்கள்
இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.
தொலைபேசி இலக்கம்
உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.
பிள்ளைகளின் பெயர்கள்
இதுவும் அடையாளத் திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.
பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்
பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

vedanthangal_1_620
செங்கல்பட்டு புறவழிச் சாலையில் வண்டியை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்ள இறங்கியபோது, எங்கள் நண்பர்கள் பறந்து போய்க் கொண்டிருந்தனர். சரி, எப்படி இருந்தாலும் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்க்கத் தானே போகிறோம் என்று தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டோம்.
தேசிய நெடுஞ்சாலை 45ல் வையாவூர் சென்றடைந்த போது மேகங்களுக்கு நடுவில் இருந்து எட்டிப் பார்த்து சூரியன் கண்சிமிட்டினான். வானில் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு வண்ணங்கள் வாரியிறைக்கப்பட்டிருந்தன. அதற்கு எதிரே இருந்த வேடந்தாங்கல் சாலையில் வண்டியை ஓட்டினோம்.
வீண் பரபரப்பு தொற்றிக் கொள்ளாத அந்த சிற்றூரின் உள்ளே நுழைந்து ஊரின் கிழக்கு எல்லையை அடைந்தால், அமைதியாக வீற்றிருக்கிறது அந்தப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம். பெரிய பந்தோபஸ்து எதுவும் இல்லை. உள்ளூர் மக்கள் புதியவர்களை சிநேகமாகவே பார்க்கிறார்கள்.
‘ஏரிகள் மாவட்டம்’ என்று புகழ்பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அண்டை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஏரிகள் நிறைந்திருக்கின்றன. பண்டைகாலம் தொட்டே ஏரிகள் நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. வேடந்தாங்கல் ஏரி மற்றவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. அங்கு பறவைகள் கூடுகின்றன. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட முதல் பறவை சரணாலயம்.
சரணாலயத்துக்குள் கால் பதித்தபோது சில ஊசிவால் வாத்துகளும், நீர்க்கோழிகளும் வரவேற்றன. அது ஏரியின் ஓர் எல்லை.
சிறிது தொலைவு நடந்தவுடன் தொலைநோக்கி கோபுரம் இருந்தது. படிகளில் ஏறுவதற்கு முன் பெரிய பறவைகளின் குரல்கள் கலவையாக ஒலித்து ஆர்வத்தை தட்டியெழுப்பின. நாரைகள், அரிவாள்மூக்கன்கள், சுரண்டிவாயன்கள் குரல் எழுப்பும் தன்மை உள்ளவை. வேகமாக படிகளைக் கடந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்றோம்.
‘அப்பப்பா, என்ன அது!’
மரங்களிலும் செடி கொடிகளிலும் பூக்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இது பறவைகள் பூத்த மரங்களாக அல்லவா காட்சி தருகின்றன! எங்கு நோக்கினும் பறவைகள் கூட்டங்கூட்டமாக – ஏரியில் இரை தேடிக் கொண்டு சில, மீண்டும் கூட்டுக்குப் பறந்து கொண்டு சில, வண்ண வண்ண இறக்கைகளை அசைத்தவாறு வானை அளந்து கொண்டு சில, ஒரு மரத்தில் இருந்து மற்றொன்றுக்கும் ஒரு கிளையில் இருந்து மற்றொன்றுக்குமாக தாவிக் கொண்டு சில இப்படி பல்வேறு செயல்பாடுகளில் நீர்ப்பறவைகள் தங்கள் அன்றாடப் பணிகளை வழக்கம் மாறாமல் தொடங்கியிருந்தன.
மார்கழி மாதக் கடைசி நாள். அடுத்த நாள் கதிரவனை வழிபடும் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாட கிராமங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. எதிரே வரும் ஆள் தெரியாத அளவு மார்கழிப் பனி பெய்து கொண்டிருந்தது.
இரண்டு பேரை சுமந்துகொண்டு செல்லும் திறன் பெற்ற ‘நம்ம ஊரு வண்டி’ ஒன்றில் வயல்வெளிகளிடையே நெளிந்து வளைந்து சென்ற பாதையில் நானும் நண்பரும் வேடந்தாங்கல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். நடுநடுக்கிய அந்தக் காலைப் பொழுதில் அந்தப் பகுதிக்கு அந்நியமான, பனிக்குப் பயந்து முகத்தை மூடியிருந்த எங்களை அப்பகுதி மக்கள் வியப்பாகப் பார்த்தது இயல்பான ஓர் எதிர்வினையே. அவர்களைத் தாண்டி வண்டி நகர்ந்தது.
வேடந்தாங்கல் சரணாலயம் எப்பொழுதுமே இப்படித்தான். காலை நேரங்களில் அமைதியின் திருவுருவமாக இருக்கும். சரணாலயத்துக்குள் கால் பதித்தவுடன் பெரிய ஆச்சரியம் உங்களை திக்குமுக்காடச் செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் சில பத்தடி தூரம் நடந்து சென்ற பிறகும் இதே உணர்வு நீடிக்காது. நீங்கள் உங்களை மறந்து போவீர்கள்.
கோபுரத்தின் உச்சியில் இருந்து பறவைகளை நன்கு பார்க்க முடியும். அங்கு தொலைநோக்கி வைக்கப்பட்டிருந்தது. வரிசையில் நின்று பறவை தரிசனம் பெறலாம். கோபுரத்தில் நின்றால் பறவைகள் முன்னும் பின்னுமாக நடந்து செல்வதை நெருக்கமாகப் பார்க்கலாம். அவை பறக்கும் வேகம் காரணமாக படமெடுப்பது கடினம். மேலும் கூர்மையான லென்ஸ் கொண்ட ஔிப்படக் கருவிகள் தேவை.
இந்த கோபுரம் தவிர சரணாலயத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பரந்த கண்காணிப்பு மேடை ஒன்றிலும் கூர்மையான தொலைநோக்கி வைக்கப்பட்டிருந்தது.
தை மாதத்துக்கு கட்டியம் கூறுவது போல, மெல்ல மேகங்களை விலக்கி காலைச் சூரியன் கண்விழித்துக் கொண்டிருந்தான். வடக்குப் பக்கம் இருந்த மரங்களில் பெரும்பூக்களைப் போல மலர்ந்திருந்தன நீர்ப்பறவைகள். அவற்றில் பெரும்பாலானவை மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted Stork). தமிழ்நாட்டின் இரு கோடிகளில் அமைந்துள்ள வேடந்தாங்கல், கூந்தங்குளம் பறவை சரணாயலங்களில் வலசை காலங்களில் இந்த நாரைகள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றன.
கோடையில் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மஞ்சள் மூக்கு நாரைகள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது வேடந்தாங்கலை வந்தடைகின்றன. கூடமைத்து குஞ்சு பொரிக்க ஏற்ற நீர்மரங்கள், குஞ்சுகளுக்கும் வளர்ந்தவைகளுக்கும் தேவைப்படும் மீன்கள், தவளைகள் வேடந்தாங்கலில் அபரிமிதமாகக் கிடைப்பதே இதற்கு அடிப்படைக் காரணம்.
முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2006ம் ஆண்டில் மஞ்சள் மூக்கு நாரைகள், நத்தை குத்தி நாரைகள், சின்ன கொக்குகள், உண்ணிக் கொக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. ஓரளவு தென்படக் கூடிய கூழைக்கடாகள், நீர்க்காகங்கள், முக்குளிப்பான்கள், சிறகுகள் குறைந்த எண்ணிக்கையில் சரணாலயத்தில் உள்ளடங்கி காணப்பட்டன.
வித்தியாசமான தோற்றம் கொண்ட அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், பாம்புத்தாரா சாதாரணமாக அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. இவற்றின் பெயரும் நடத்தைகளும் சுவாரசியமானவை.
spoonbill_370சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, இராக் கொக்கு போன்ற கொக்கு வகைகளையும் இங்கு பார்க்கலாம். பலரும் பார்க்க ஆவலாக இருக்கும் பூநாரைகள் (Flamingo) கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கே வருகின்றன. வேடந்தாங்கலுக்கு அவை வருவதில்லை. பண்டைக் காலத்தில் திருப்பாலைவனம் என்ற துறைமுகமாகத் திகழ்ந்த பழவேற்காடு சரணாலய கழிமுக ஏரிக்கு ஜனவரி மாதம் சென்றால் இப்பறவைகளை பார்க்கலாம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழக நீர்ப்பறவைகளில் பெரும்பாலானவற்றை வேடந்தாங்கலில் பார்த்துவிடலாம் என்பது இந்தச் சரணாலயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
ஏரியின் கரைப்பகுதிக்கு அருகேயிருந்த மரம் ஒன்றுக்கு வந்த மஞ்சள் மூக்கு நாரை நாங்கள் நின்றதை பொருட்படுத்தாமல் கிளையை முறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. கூந்தங்குளத்தில் மிகவும் சிநேகமான, மனிதர்களின் இருப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக உலாவரும் பறவைகளை பார்க்க முடியும். வேடந்தாங்கலிலும் அப்படிப்பட்ட பண்பை அப்போது உணர முடிந்தது.
பறவைகளை நோக்க இரு கண்ணோக்கி அவசியம். பறவைகள் அளவில் சிறியவை என்பதாலும், நீர்நாரைகளில் உள்ளடங்கி இருப்பதாலும் இரு கண்ணோக்கி இன்றி பறவைகளை அனுபவித்து பார்க்க முடியாது. இரு கண்ணோக்கி நம்மிடம் சொந்தமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பறவை ஆர்வலர்களிடம் இரவல் பெற்றுச் செல்வது நல்லது. அதன் மூலம் பறவைகளைப் பார்ப்பது ஓர் அருமையான அனுபவம். காட்சிகள் பகுதி பகுதியாக தனித்தனி படங்கள் போல விரியும். கண்ணோக்கியின் எல்லைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளும் தனித்தனியாகப் பிரிந்து தெரியும்.
வேடந்தாங்கல் சரணாலயம் ஏரியில் அமைந்திருப்பதால் யாரும் பறவைகள் அருகே செல்ல முடியாது. கர்நாடகாவில் உள்ள ரங்கண்ணத்திட்டு சரணாலயத்தில் ஏரியின் உள்ளேயே படகுகள் அனுமதிக்கப்படுகின்றன. இது போல வேடந்தாங்கல், கூந்தங்குளத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படிச் செய்வது பறவைகளின் வாழ்க்கையில் தொந்தரவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அருகில் சென்றால் பறவைகள் பறந்து செல்லவும் வாய்ப்பு உண்டு.
இந்த சரணாலயத்தின் பாதுகாப்புப் பாரம்பரியம் சில நூற்றாண்டுகளுக்கு நீளும் வரலாறு கொண்டது. வேடந்தாங்கல் இந்தியாவின் பழைமையான நீர்ப்பறவை சரணாலயம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 1798ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழைமையான, உலகின் பழைமை வாய்ந்த பறவைகள் சரணாலயங்களில் ஒன்று இது. நினைவு தெரியாத காலம் தொட்டே ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்குப் பின் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை வேடந்தாங்கலுக்கு பறவைகள் வந்து செல்கின்றன. இப்பறவைகள் இயற்கையின் ஒரு பகுதியாக, தங்கள் நண்பர்களாகவே இப்பகுதி மக்கள் பார்க்கின்றனர். இயற்கையுடன் மக்கள் கொண்ட உறவின் தொடர்ச்சியாகத்தான் சங்ககாலத்தில் சத்திமுற்றப் புலவர் ‘நாராய். நாராய் செங்கால் நாராய்’ என்று பாடினார். அந்தப் பாரம்பரியம் இங்கு தொடர்கிறது.
சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இங்கு வரும் பறவைகளை காக்கும் உரிமையை ஆங்கிலேய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்து, இந்த ஊர் மக்கள் பெற்றுள்ளனர். பல நூற்றாண்டுகளாக பறவைகளுக்குத் தொந்தரவு தராமல், தொந்தரவு செய்ய முயற்சிப்பவர்களை தடுக்கும் பணியை கிராம மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வேடந்தாங்கல் வரலாறு
பண்டைக் காலம் தொட்டே தென்னிந்தியாவில் நீர்நிலைகள் அல்லது கிராமப் பகுதிகளில் நீர்ப்பறவைகள் அமைக்கும் கூடுகளை பாதுகாப்பது அந்தந்தப் பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. நம் நாட்டின் பாரம்பரிய பண்பாடான பாதுகாப்புப் பணியை, நிறைவேற்ற வேண்டிய கடமைகளுள் ஒன்றாகக் கருதி மக்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
வேடந்தாங்கலின் 1790க்கு முந்தைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. அதற்கு முன்னர் இப்பகுதி எந்த ஆட்சியின் கீழ் இருந்தது என்ற தெளிவின்மையே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் நிலையான அரசு இல்லை. 18ம் நூற்றாண்டில் வேடந்தாங்கல் கிராம மக்கள், செங்கல்பட்டின் முதல் கலெக்டராக கிழக்கிந்திய கம்பெனியால் நியமிக்கப்பட்டிருந்த லியேனெல் பிளேஸ் (Lionel Place) இடம் கூலி பெற்றதாக குறிப்பு உள்ளது. வேடந்தாங்கல் குளத்தில் கூடமைத்துள்ள பறவைகளை கண்ணி வைத்து பிடிக்க, துப்பாக்கியால் சுடுவதைத் தடுப்பதற்கு இந்தக் கூலி வழங்கப்பட்டுள்ளது. இடையில் இந்தக் கூலி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 1858ம் ஆண்டு இந்த உரிமை புதுப்பிக்கப்பட்டது. 1858ம் ஆண்டு ஆவணம் ஒன்று இந்தக் கூலி பற்றி குறிப்பிடுகிறது. அத்துடன் குளத்தின் நடுவில் பறவைகள் கூடமைக்கும் சமுத்திரப் பாலை மரங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
சில நூற்றாண்டுகளாக பறவைகளை பாதுகாத்து வந்த உரிமையை இந்த மக்கள் பெற்றிருந்ததை வைத்துப் பார்க்கும்போது, 200 ஆண்டுகளாக வேடந்தாங்கல் ஒரு சரணாலயமாக இருந்து வருகிறது  எனலாம். 1936ம் ஆண்டில் செங்கல்பட்டு கலெக்டர் இந்தப் பகுதியை சரணாலயம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த சரணாலயத்தை பராமரிக்க அரசு செலவு செய்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.
வேடந்தாங்கலைக் சுற்றி 35 கி.மீ. சுற்றளவுக்கு பறவைகள் வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன் பெருமளவு பறவைகள் சுடப்பட்டு வந்தன.
200 ஆண்டுகளுக்கு மேலாக வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பதிவு செய்யப்பட்ட வரலாறு இருந்தாலும், இத்தனை மாற்றங்களுக்கு மத்தியில் பறவைகளைப் பாதுகாப்பதில் இந்த மக்கள் காட்டி வரும் இயல்பான ஆர்வம், பல நூறு ஆண்டுகளைக் கடந்த அந்த மக்களின் கூர்மையான கண்காணிப்பு காரணமாகவே இன்றளவும் இத்தனை பறவைகள் இங்கு வந்து கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகள் வருகைக்கு கிராம மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு முக்கிய காரணம்.
வேடர்கள் தங்குமிடமாக இருந்த காரணத்தால் வேடந்தாங்கல் என்ற பெயரைப் பெற்ற இந்த கிராமம், காட்டுயிர் பாதுகாப்பு பாரம்பரியத்தைப் பேணி, இன்று வரைப் பறவைகளை பாதுகாத்து வருவது போற்றப்பட வேண்டிய ஒரு செயல்.
கூலி வேலை பார்க்கும் தேவராஜன், தட்சிணாமூர்த்தி, மாரியப்பன் ஆகிய மூவரும் வேடந்தாங்கலில் வளையவரும் பறவை நண்பர்கள்.
Vedanthangal_Darter_370“பறவைகள் இயற்கையின் அவதாரம். இங்கு வரும் பறவைகள் 40, 50 கி.மீ. சுற்றுப்பரப்புக்கு இரைதேடிப் போகும். அவற்றைக் கொல்லும் வேட்டையாடிகளை நாங்கள் தடுக்கிறோம். வெசக்காலி பாம்புகள், கருடப் பருந்து, கறுப்பு காக்கை ஆகியவை அவற்றுக்கு எதிரிகள். தவிர ஒரு மருந்துக் கம்பெனியின் மாசும் சேர்ந்து கொண்டுள்ளது.” என்கிறார்கள் இவர்கள் மூவரும். வேடந்தாங்கல் கிராம மக்களிடம் உள்ள மனப்பான்மைக்கு இவர்கள் சிறு எடுத்துக்காட்டு.
மழை பொழிவது முதல் உணவு உற்பத்தி வரை இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சி முறையில் தான் இயங்குகிறது, மனிதத் தலையீடு இல்லாத வரை.
இக்கிராம மக்களுக்கு இயற்கையின் கொடை போல ஏரி நீர் விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கள் எச்சங்களை ஏரியினுள் இடுகின்றன. இதனால் அந்த நீர் ஊட்டச்சத்து மிக்கதாக, இயற்கை உரம் போல ஆகிவிடுகிறது. இந்த நீரை வயலுக்கு பாய்ச்சும்போது பயிர்கள் கூடுதல் வளம் பெறுகின்றன. ஏரியில் உள்ள மண் கூட ஊட்டச்சத்து மிக்கதாகக் கருதப்படுகிறது.
வழக்கமாக மரங்களுக்கு அதிக தண்ணீர் ஊற்றினால் அழுகிவிடும். அதேநேரம் நீர்நிலைகளில் செழித்து வளரும் மரங்கள் உள்ளன. அவற்றில் நீர்க்கருவை, சமுத்திரப் பாலை மரங்கள் ஏரியினுள் இயற்கையாகவே அதிகம் வளர்ந்துள்ளன. இவை நமது பாரம்பரிய மரங்கள், பறவைகளின் வருகையை பராமரிக்கும் பொருட்டு வனத்துறையும் இந்த மரங்களை நடுகிறது. வேடந்தாங்கல் ஏரிக்கு உத்திரமேரூர், வந்தவாசியில் இருந்து கால்வாய் வெட்டி நீர் இருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. பறவைகளுக்கு உணவாகும் மீனும் வளர்க்கப்படுகிறது.
ஏரியில் அதிக நீர் இல்லாத காலத்தில் வெளிநாட்டு ஒளிப்பட கலைஞர்கள் ஏரியின் பக்கவாட்டு பகுதிக்குச் சென்றும் படமெடுப்பது உண்டு. பரப்பை கணக்கில் கொண்டால் கூந்தங்குளம் பெரிது, வேடந்தாங்கல் சிறியது என்றாலும், இங்கு பறவைகளை அதிக எண்ணிக்கையில், தெளிவாக பார்க்க முடியும். கூந்தங்குளத்தில் மரங்கள் நடுப்பகுதியை மையமிட்டிருக்கும். அங்கு நீண்ட காலத்துக்கு அதிக பறவை வகைகளைப் பார்க்க முடியும்.
வேடந்தாங்கல், கூந்தங்குளம் ஆகிய பறவை சரணாலயங்களுக்கு முதன்முறையாக செல்பவர்கள் போக்குவரத்து வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் தொடர்பாக தெளிவாக விசாரித்து விட்டுப் போக வேண்டும். பறவை நோக்குதல், கானுலா போன்றவற்றில் ஒரு சில இடர்ப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பயணங்கள் தரும் அரிய அனுபவத்தை கணக்கில் கொண்டே இவற்றை மதிப்பிட வேண்டும். எந்தப் பகுதிக்கு செல்வதற்கு முன்னும் சிறிது நேரம் செலவழித்து முன் தயாரிப்பு செய்தால் பிரச்சினையின்றி சென்று வரலாம்.
இரண்டு ஊர்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் தான் பேருந்து வசதி உள்ளது. இந்த வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதேநேரம் சரணாலயங்களில் பறவைகளுக்கு தொந்தரவு தராமல், இணக்கமாக நடந்து கொள்ளும் முறை பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

கிங் பிஷர் ஏர்லைன்ஸ்: மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?
கிங்பிஷர் விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.
கடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தொடங்கி விமான நிலைய வாடகை வரை திரும்பிய பக்கமெல்லாம் கடன் வைத்திருப்பதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ‘கைல காசு வாய்ல தோசை’ (cash-and-carry) என்கிற முடிவுக்கு வந்து விட்டதாலும் தான் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தால் விமானங்களை இயக்க முடியாமல் போனது என்று  செய்திகள் வெளியாகின.
2003-ம் ஆண்டு மல்லையாவால் நிறுவப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு வாக்கில் தனது விமான சேவையைத் துவக்குகிறது. அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக நட்டக்கணக்கு தான் காட்டி வருகிறது. கிங்பிஷர் நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார்  7000 கோடி ரூபாய்கள். இந்தக் கடன்கள் அனைத்துக்கும் அரசுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் உத்திரவாதப் பத்திரங்கள் அளித்திருக்கின்றது.
தற்போது ஒட்டுமொத்தமாக மட்டையாகிக் கிடக்கும் தனது மீன்கொத்திப் பறவையை மீண்டும் பறக்கவிட அரசின் உதவியை நாடியுள்ளார் மல்லையா. அவர் அரசாங்கத்தை அணுகியிருப்பதைக் கண்ட அவரது போட்டித் தரகு முதலாளிகள், ஆளுக்கொரு ஈயச்சட்டியைத்  தூக்கிக் கொண்டு வரிசை கட்ட ஆரம்பிக்கவே, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தரகுமுதலாளிகள் அரண்டு போய் ‘கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு பெயில் அவுட் கொடுக்கக் கூடாது’ என்று அலறுகிறார்கள். மல்லையாவோ, ‘நாங்கள் பெயில் அவுட் செய்யும்படி கேட்டதுமில்லை கேட்கப்போவதுமில்லை’ என்று சவடால் அடித்திருக்கிறார். இது ஒரு அண்டப் புளுகு.
மக்களை ஏமாற்றுவதிலும் அதற்கு அரசை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பேனியைத் துவக்கும் மல்லையா, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தருவதை விட அதிகமான வட்டியைத் தருவதாக வாக்களிக்கிறார். இதை நம்பிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இவரது நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி மக்களிடமிருந்து வசூலித்த முதலீட்டை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்ட மல்லையா, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாற்றியிருக்கிறார்.
இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்தும் விட்டார். அன்றைக்கு மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் நிதியை யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு கள்ளத்தனமாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு நட்டக் கணக்கெழுதி நிறுவனத்தின் பெயரை மாற்றி மஞ்சக்கடுதாசி கொடுக்கவும் அரசு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் மல்லையாவுக்கு உதவியது ஆளும்வர்க்கம் தான். மெக்டவல் க்ரெஸ்ட் நட்டமடைந்து விட்டதாகவும் அதற்கு அரசு கைகொடுத்து (பெயில் அவுட்) உதவ வேண்டுமென்றும் மல்லையா வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் போன திசை இன்னதென்று தெரிந்தும் அரசு மௌனமாகவே இருந்து வருகிறது.
அடுத்து, தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளிக் கொடுத்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.
சந்தையில் தமக்குப் போட்டியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடிக்கச் செய்து விட்டு தான் தனியார் விமான நிறுவனங்கள் போட்டிக் களத்துக்கே வந்தன. இத்தனை சலுகைகளையும் மீறித்தான் கிங்பிஷர், ஜெட்ஏர்வேய்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் நட்டக்கணக்குக் காட்டுகின்றன. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடித்தால் மட்டும் போதாது, தலையில் பெரும் பாரத்தையும் தூக்கி வையுங்களேன் என்று மல்லையா கேட்கிறார். அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது டிக்கெட் விலைகளை உயர்த்த வேண்டுமாம். ஆக, ஏற்கனவே குழிக்குள் தள்ளி விட்டது மட்டும் போதாது, கூடவே மண்ணைப் போட்டு நிரவி விடுங்கள் என்பதே மல்லையாவின் கோரிக்கை.
இது ஒருபுறமிருக்க, கடந்த  மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா. அந்த சமயத்தில் கிங்பிஷர் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 64.48 ரூபாய்களாக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 19.65 ரூபாய்களாக வீழ்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே தனது நட்டத்தை மக்கள் மேல் சுமத்தி விட்டார் மல்லையா. பெயில் அவுட் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை. துவங்கிய நாள் முதலாக நட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தின் 83% தனியார் விமானக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவோ வெறும் 17% சந்தைக்குள் முடக்கப்பட்டுள்ளது. ஆக, எரிபொருள் கடன், வருமான வரியும் கட்டவில்லை, விமானநிலைய வாடகையில் கடன், விமானத்தில் தண்ணீர் சப்ளையில் இருந்து சாப்பாடு சப்ளை வரை செய்யும் அனைவரிடமும் கடன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கடனையும் வைத்துக் கொண்டு – அரசின் உதவியோடு பெரும் சதவீதத்திலான சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்தத் தனியார் விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்பது தான் இவர்களின் யோக்கியதை.
இந்திய மக்கள் தொகையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரை சதவீதத்திற்கும் குறைவு. இந்த சிறிய மக்கள் பிரிவினருக்கான சின்னஞ்சிறு சந்தையை விழுங்க தனியார் விமான நிறுவனங்களுக்கிடையே நடந்த நாய்ச்சண்டைகள் இன்றைக்கு அவர்கள் ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கிக் கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாக ஒரு காரணம். அமித உற்பத்தியும் அதற்கான சந்தையைக் கைப்பற்ற நடக்கும் குத்துப்பிடி சண்டைகளுமே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதிகளையும் அதிலிருக்கும் சவால்களையும் முதலாளிகள் அறிந்தேயிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த சொற்ப சந்தையையும் கபளீகரம் செய்து தானே தனியாய்த் தின்ன வேண்டும் என்கிற பேராசை தான் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும் புதிய விமானங்கள் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தம் போட வைக்கிறது.
இன்னொரு பக்கம், மல்லையாவின் ஊதாரித்தனம் ஊரறிந்த இரகசியம். கடந்த மாதத்தில் மட்டுமே சரக்குப் பார்ட்டிகளில் கலந்து கொள்ள மூன்று முறை அமெரிக்காவுக்குத் தனி விமானத்தில் பறந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 70 லட்சங்களுக்குக் குறையாமல் செலவு செய்தும் உள்ளார். 89 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூயாய்) மதிப்பிலான சொகுசுக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதும், அழகான மாடல்களை அம்மணமாய் நிற்க வைத்து காலண்டர்கள் வெளியிடுவதுமாக உல்லாசப் பிரியராக உலகத்தை வலம் வந்த மல்லையா துடிப்பான இந்தியாவின் குறியீடாகக் கருதப்பட்டவர். மேல் நடுத்தரவர்க்க யுப்பிகளின் கனவுக் கண்ணனாகவும், பணக்கார இந்தியர்களின் கொண்டாட்டப் பெருமிதமாகவும் கருதப்பட்ட மல்லையா, தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்பது போல முதலாளித்துவப் பத்திரிகைகள் சோக கீதம் வாசிக்கின்றன.
உண்மையில் மல்லையாவின் சீமாச்சாராய தொழிலே சில ஆயிரம் கோடி சொத்து மதிப்புடையது. அரசாங்கங்களே குடியை கோவிலாக வளர்த்து வரும் நிலையில் மல்லையா இதில் சுருட்டும் லாபம் பல மடங்காகும். இது போக ஐ.பி.எல் பெங்களூரூ அணியினை ஏலமெடுத்து அதையும் இலாபகரமான தொழிலாக நடத்துவதையும் நீங்கள் அறிவீர்கள். மல்லையாவின் அம்மண அழகிகள் காலண்டர்களே பல கோடி செலவில் எடுக்கப்பட்டு பெரும் விளம்பரங்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய கஸ்மாலத்துக்கு இந்திய மக்கள் பணத்தை கொடுத்து நட்டத்தை சரி செய்ய நினைப்பது அயோக்கியத்தனமில்லையா?
முதலாளித்துவம் அம்மணக்கட்டையாய் நின்று கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பத்திரிகைகளோ ‘அதோ பாருங்கள் நம் மாமன்னர் ஜொலிக்கும் தங்க உடையணிந்து நகர்வலம் வருகிறார்’ என்று கதையளக்கின்றன. அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.
இந்தச் சிக்கலில் இருந்து மல்லையாவை அரசு எவ்வாறு கைதூக்கி விடலாம் என்கிற ஆலோசனைகளைத் சொல்லிக் கொண்டுள்ளன. தனியார் விமானக் கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, வரியைக் குறைப்பது, விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைப்பது, விமான நிலைய வாடகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து இத்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன.
சுமார் 5 கோடி குடும்பங்களை வாழ வைக்கும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் நிறுவனங்களை நுழைய விட்டதன் மூலம் அழிவுக்குள்ளாகியிருக்கும் அக்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயத்தையோ சிறு தொழில்களையோ காப்பாற்ற வேண்டுமென்றோ இந்தப் பத்திரிகைகள் இதுவரை கோரியதுமில்லை;  இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது ஒரு ஊதாரியின் நட்டத்தை மக்களின் தலையில் எவ்வாறு கட்டலாம் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. மன்மோகன் சிங்கோ ‘அரசு பரிவோடு பரிசீலிக்கும்’ என்கிறார். இது யாருக்கான அரசு என்பதில் இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்: அமெரிக்க பேராசிரியர்

முஹம்மத் அம்ஹர்: இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது புதிய ஆய்வுப் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இயேசு ஒரு முஸ்லிம் ? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் விரைவில் வெளிவரவுள்ளது .

மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.

“இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார்.

பாக்ஸ் நியூஸ் தொலைகாட்சிக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, July 24, 2012

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், [...]‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!
டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.
ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.
ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.
இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.
டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.
“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.
இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.
‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.
இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.
டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள்

இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.











படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு.
இருபதாயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.  ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர் மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.  1989-ம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் இழப்பீடாக தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. (470 மில்லியன் டாலர் அல்லது ரூ.713 கோடிகள். இது பாதிக்கப்பட்ட 5,74,367 பேருக்குப் பங்கு வைக்கப்படுகிறது).  கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகக் காத்திருப்பு.  இதெல்லாம் யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தானோ?  ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை.
இருப்பினும் குற்றவாளி என்ற முறையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரத் தவறிய செயல் போபாலில் வீழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்ற கருத்துரை சற்றே கேலிக்குறியதாக இருக்கிறது. 1984 போபால் விஷவாயுப் பேரழிவு பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.  இதிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிற்கும் முயற்சி முழுமையாய் நடந்தேறுகிறது. இந்நிறுவனத்தின் மித்தேன் ஐசோசயனைடு வாயு 20000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன.  இருந்தும் இந்த கார்பைடு நிறுவனத்தின் கொலை பாதகச் செயலுக்கான விலையை போபால் இன்னமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  (விஷ வாயுவால் தாக்கப்பட்டோரின் நீண்டகால உடல் பாதிப்புகளும் மற்றும் மூடப்பட்ட கர்பைட் ஆலையைச் சுற்றியுள்ள நஞ்சாக்கப்பட்ட நிலமும், நிலத்தடி நீரும் இதற்கு சான்று பகர்கின்றன).  இந்த நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா, நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதாக அமையும்.
படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது – ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தும் லாபம் ஈட்டலாம் என்று வெறிகொண்டு அலைந்து வரும் தொழிற்கழகங்களின் நடவடிக்கைகளிலேயே உச்சம் இது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் பெரிதும் நவம்பருக்கு முந்திய வெற்றுத் தேர்தல் அமளியே தவிர வேறல்ல.  கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் படுத்துப் புரண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.
இத் தீர்ப்புகளில் முதலாவது 2008-ல் வழங்கப்பட்டது.  எக்சான் வேலிஸ் எண்ணை நிறுவனம் தொடர்பான அதுவரையிலான வரலாறு காணாத (அல்லது ஒப்புக்கொள்ளப்படாத) எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸின் எண்ணைக் கசிவுக்கு நிகரான கசிவை சுமார் எட்டு நாட்களுக்கு ஒரு முறை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழ்த்திக் காட்டுகிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-ல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர்.  ”மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதிக்குப் பாதியாகக் குறைத்தது” எனவும்  ஜூன் 2008-ல், “உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக மேலும் 80% குறைத்தது – பாதிக்கப்பட்ட வாதிகளுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே” என்று கவுண்டர்பஞ்ச்.ஆர்க் –ல் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஷரோன் ஸ்மித். இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக்கொண்டு பணிஓய்வு பெற்றார்.
நாங்கள் 33000 பேர் பகிர்ந்துகொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என அவர் பற்றி எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தொகை முதல் தீர்ப்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டில் சுமார் 10 சதவீதத்துக்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் பெறப்போகும் சுமார் 15000 டாலர்களுக்கும் சமமானது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் [kleptocrats] புகழார்ந்த வகையில் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர்.  அவர்களது செயல் அமெரிக்கர்களும் ஏனைய உலக மக்களுமான பல பத்து லட்சம் பேர்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது.  எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர்.  தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு கூட, “அமெரிக்கக் கருவூலத் துறை என்றும் காணாத பேரழிவில் இருந்து தேசத்தின் மாபெரும் வங்கிகளில் ஒன்பதைக் காப்பாற்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து 125 பில்லியன் [12500 கோடி] டாலர்களைக் கொடுத்த சில வாரங்களிலேயே, அத்தொகையின் பெரும் பகுதியை வங்கி இயக்குனர்கள் தங்களது செயல்பாட்டுக்கான ஊக்கப்பரிசு என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை சுருட்டிச் செல்கின்றனர்”  என்று தனது சிறப்புத் தலையங்கத்தில் எழுதியது. (அதே தேர்தல் ஆண்டில் தான், ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கையை ‘தோண்டு கண்ணு, தோண்டு’ என்ற குத்தாட்ட முழக்கத்துடன் குதியாட்டம் போட்டு வரவேற்றன பகாசுர எண்ணைக் குழுமங்கள். [Big Oil] இப்போது என்ன சொல்வது? ‘கசியட்டும் கண்ணு கசியட்டும்… கடலே கூவமாகட்டும்’ என்பதா?)
இவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும்  தேசிய தேர்தல் ஆணையத்துக்கும்  இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்களின் பலத்துக்கு மேலும் வலு சேர்த்தது.  “ஏற்கனவே வெள்ளமெனப் பாயும் [கார்ப்பரேட்] பணத்தில் மிதந்துகொண்டிருக்கும் தேர்தல் களத்தில் இப்போது இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும் … பிராந்திய, மாநில, தேசிய அளவுகளிலான பதவி நாற்காலிகளைப் பிடிக்க எத்தனிக்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்” என்கிறார் ரால்ப் நதிர்.   “இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடனும் [கடமைகள் என்று ஏதும் இல்லையாயினும்]  கூடிய ஒரு ‘சட்டவகை மனிதன்’; இவ்வாறாக, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; மேலும், பணக் கொடை என்பது பேச்சின் ஒரு வடிவமே” என்று கவுண்டர்பஞ்ச் செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி விளக்குகிறார். எனவே துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு.. வாய்ப்புகள் இன்னும் கைநழுவி விடவில்லை.  காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரித்திருப்பவர்களில் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா, எண்ணிப்பார்.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடர்பான எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்தும் இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோலர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. ’அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை’ [Foreign Policy in Focus ]யின் கட்டுரையாளர் கான் ஹல்லினன் குறிப்பிடுவது போல, “நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ம் ஆண்டுக்கும்  2000-ம் ஆண்டுக்கும்  இடைப்பட்ட காலத்தில் 9000 –க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன.  நடப்பில் உள்ள அதிகாரபூர்வமான எண்ணைக் கசிவுப் பகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 2000”.  அப்படியெனில் ஆப்பிரிக்க மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லையா?
போபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், பிற விசயங்களுக்கு மத்தியில், “நமக்குள்ள வச்சுக்குவோம், இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளை எல்லாம் பெருமளவில் வளர்ச்சி குன்றிய நாடுகள் தலையில் தள்ளிவிட உலக வங்கி உந்துதல் அளிக்கக் கூடாதா?” என்ற இக்கருத்தையும் எழுதியிருந்தார்.  “அபாயகரமான நச்சுக் கழிவுகளை வருமானமில்லாத ஏழை நாடுகளில் கொண்டு கொட்டுவதற்கான பொருளியல் காரணங்கள் முற்றிலும் சரியானவையே. அதற்கு நாம் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்தார்.
கேலியாகவும், கிண்டலாகவும், இன்ன பிறவாகவும் தான் எழுதிவிட்டதாக சம்மர்ஸ் பின்னர் சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படியும் அவரது அந்த இரைஞ்சல்களைக் கொள்வார் இல்லை.  ஆயினும், பின்னாளில் அவர் ஹார்வர்ட் தலைவர் ஆனார், இன்னாள் அதிபர் ஒபாமாவின் தலைமை பொருளியல் ஆலோசகராகவும் இருக்கிறார்.  அவரது அன்றைய குறிப்பின் சாரமே உலக எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வில் தொடங்கி துல்லியமாக இதுதான் நடந்திருக்கிறது.
அரசின் ஒழுக்கம் 1984-ல் இருந்த அதன் கேடுகெட்ட நிலையில் இருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே போபால் தீர்ப்புக்கான ஐ.மு. கூட்டணி அரசின் எதிர்வினை காட்டுகிறது.  போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போக முடியாத இரட்டை வேடம்.  போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டோரின் நியாயம் நடந்துவிட்டதற்குப் பின் செய்யப்பட்ட விற்பனை. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா விசயத்திலோ இது அரசு செய்யும் முன்பேர விற்பனை.  1984 போபால் பேரழிவு தொடர்பாக மறைப்பதற்கு ஏதோ வைத்திருப்பது இந்த அரசுகள் மட்டும்தானா?  விபத்து நடந்த அந்த சமயத்தில் கூட, “கார்பைட் ஊழியர்களின் சதிவேலையால்”  இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது என்ற திட்டமிட்ட வதந்திகளை மகிழ்ச்சியாய்ப் பரப்பின செய்தித்தாள்கள்.  நான்கு ஆண்டுகள் கழித்து, யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு ’ஆய்வு’, ஆலையில் வேலைசெய்த அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியால் நிகழ்ந்துவிட்ட போரழிவே இது என்று கண்டுபிடித்துவிட்டதாக கூறிக்கொண்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாதபடி கார்பைடு நிறுவனம் உத்தரவாதப்படுத்திக் கொண்டது.  இந்த வழக்கை நடத்துவதற்கு சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்டத்துறை ஒளிவட்டங்கள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். (அதன் விளைவுகளை நாம் இன்று சந்திக்கிறோம்) அமெரிக்க நீதிமன்றங்கள் விதித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையில் இருந்து இச்செயல்கள் கார்பைட் நிறுவனத்தை விடுவித்தன.
அடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது.  இந்த என்ரான் கும்பல் எவ்வளவு பரிசுத்தவான்கள் என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல மெத்தப் படித்த மேதாவிகளும், ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். இவை எல்லாம், என்ரான் ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் கிளம்பிய பெருத்த விமர்சனங்களுக்குப் பின்னர்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் “கற்பிப்பதற்கு” என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல பத்து மில்லியன் டாலர்கள் நிதி செய்த மாயத்தால் இந்த திடீர் மன மாற்றம் சாத்தியமானது போலும். விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. ஆதரவு ஆரவாரம் செய்வோரில் ஒருவராக மாறிக்கொள்ள வேண்டியே என்ரான் பற்றிய கடுமையான விமர்சகராகத் தொடக்கத்தில் களம் இறங்கியது ஒரு பிரபலமான பத்திரிகை.  மேலும் பலரும் கூட அவ்வாறே செய்தனர். இப்படிப்பட்ட நிதிகளும் கூட பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். மகாராட்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம் மாநில மின்சார வாரியம் – என்ரான் வருகைக்குப் பின் – நட்டக் கணக்கை மலையெனக் குவிந்தது. அதன் விளைவாக, மாநில அரசு சேவை மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதியைத் தாருமாறாகக் குறைத்தது. என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்தின் முன் நில்லாது தப்பி ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் அந்த நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன.  சி.ஐ.டி.யூ வும் அபய் மேதாவும் கொணர்ந்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வெளியே வீசிய போதே இந்தப் பேரழிவில் இருந்து தப்ப இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது.
நிற்க, ஒபாமாவின் வாய்ச் சவடால்கள் பிரிட்டிஷ்  சகபாடிகளின் மனங்களைப் புண்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது.  கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது அமெரிக்கா என்பதே உண்மை.  அலெக்சாண்டர் காக்பர்ன், “வரலாற்றில் மாபெரும் கைதூக்கிவிடல்” எனச் சித்தரிக்கும் நிகழ்வில், 1953ம் ஆண்டு ஈரானின் முகமது மொசாதிக் அரசின் தொல்லைகளில் இருந்து விடுபட கேவலமான ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது அமெரிக்க சி.ஐ.ஏ.  ஈரானிய பாராளுமன்றம் தனது ஒருமித்த வாக்களிப்பின் மூலம் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்கியிருந்தது.  எனவே மொசாதிக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது.  பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பெரும் தொழிற்கழகங்களால் ஆதரவளிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளின் பட்டியலோ பெரிதாய் நீண்டு கிடக்கிறது.
போபாலில் யூனியன் கார்பைடின் செயலும், அது பழுதின்றித் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது.  ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை.  அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் பலம் கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது.  தொழிற்கழகங்களை சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனிநபர் ஆதாயத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதிக்கும், அனுமதிக்கும் சமூகப் பார்வை நீடிக்கும் வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.  இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.
போபாலில் பாதிக்கப்பட்டோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள்.  “மீண்டும் இவ்வாறான கொடுமை நிகழ முடியாதவாறு உறுதிசெய்வோம்” என்பதே அது.  எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுசக்தி விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தற்போதைய உருவில் இருக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா மூலமாக அற்ப இழப்பீட்டுடன் தப்பிச் செல்லும்.  தற்போது போபால் பேரழிவில் ஒரு குற்றமாக அணுகப்படும் இழப்பீடு பற்றிய புரிதல் எதிர்காலத்தில் வெறும் சட்ட வழிமுறையாக மட்டுமே எளிமைப்படுத்தப்படும்.  லாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக.

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று கூட்டலையும், கழித்தலையும், பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு.










ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை! அம்பானியின் ஆன்டிலியா
“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று வாய்ப்பாடு படித்து கூட்டலையும், கழித்தலையும், அதன் சுருக்கங்களான பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு. சொத்துடைமையின் நதி மூலத்தை பின் தொடர்ந்தால் கண்ணுக்கு தெரியும் அந்த மாய மாட்ரிக்ஸ் உலகத்தை எந்த கணித வல்லுனனும் கட்டவிழ்க்க முடியாது. அது கணிதத்தின் தோல்வியா, கணிதத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்காத ‘கலையா?
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும்தான் மக்கள் வருவார்கள். மற்ற கணக்கெடுப்புகளெல்லாம் பங்குகளின் முதல்வோரைகளைத்தான் சுற்றி வரும். கணிதத்தில் கூட வர்க்க வேறுபாடு துல்லியமாக நிலவுகிறது என்பது கணிதத்தின் குற்றமா, கணக்கு பார்க்க தெரியாத இந்த தேசத்தின் குற்றமா?
எங்கும் இறைந்து கிடக்கின்றன புள்ளிவிவரங்கள். நோய், சாவு, பசி, பஞ்சம், பட்டினி முதலான விவரங்களால் சலித்திருக்கும் உங்கள் கண்களை கனவோடு மின்ன வைக்கும் புள்ளிவிவரங்களும் இந்த உலகில் உண்டு. கனவிலும் எட்ட முடியாத அந்த கனவுகளின் கணக்குகளை வெளியிடுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கேள்விப் பட்டிருப்பீர்களே, உலகின் பணக்காரர்களது பட்டியல்களை….
ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்திருக்கும் மதிப்பீட்டின்படி 2014ஆம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா? அவர் முகேஷ் அம்பானி என்ற இந்தியன்தான் என்றால் உங்களுக்கு பெருமை இல்லையா? 70,000 கோடி ஊழல் பணமென்றாலும் காமன்வெல்த்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தபோது நீங்கள் பெருமைப்படவில்லையா என்ன? தகுதி, தராதரம் பார்த்தெல்லாம் நாம் பெருமைப்படுவதில்லை எனும் போது உலக பணக்கார வரிசையில் முதலிடம் ஒரு இந்தியனால் நிரப்பப்படப் போகிறது என்றால் சாதரணமா என்ன?
அந்த வரலாற்று சிறப்பைப் பெறப் போகும் முகேஷ் அம்பானி தன் தகுதியை முன் ஊகித்திருப்பாரோ தெரியவில்லை. இல்லையென்றால் அவரது தகுதிக்கேற்ப இத்தகைய பிரம்மாண்டமான மாளிகையை ஏழு ஆண்டுகளாக கட்டியிருக்க மாட்டார். 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அந்த மாளிகை விற்பனைக்கு இல்லை என்பதால் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீடு என்று அதை புகழ முடியவில்லை என்று வருத்தப்படுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால் மதிப்பெல்லாம் விற்பனையின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்காது என்பது அந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல அம்பானிக்கும் தெரியும்.
சில ஆயிரங்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் மராட்டிய விவசாயிகள் வாழும் விதர்பாவின் தலைநகரான மும்பையில் ஒரு பில்லியன் டாலர் செலவில் அம்பானி கட்டிமுடித்து புதுமனைப் போகும் அந்த மாளிகையின் அருமை பெருமையெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.
27 மாடிகள், 9 உயருந்துகள், மாளிகையை பராமரிக்க 600 ஊழியர்கள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள், நீச்சல் குளங்கள், கண்ணாடிகளால் செதுக்கப்பட்ட உணவகம், அதி நுட்பமான திரையரங்கம், உடற்பயிற்சியகம், 160 கார்கள் நிறுத்துமிடம், கார்களை பழுதுபார்க்குமிடம், சிறு மருத்துவமனை, விருந்தினர் அறைகள், கருத்தரங்க அறைகள் கிட்டத்தட்ட அங்கு ஒரு மேட்டுக்குடி ஹைடெக் நகரமே இருக்கிறது. இந்த மாளிகையில் மூன்று குழந்தைகளோடு அம்பானி தம்பதியினர் தங்கப்போகும் இடத்தின் பரப்பளவு 5,00,000 சதுர அடிகள்….
தாராவி மும்பையின் சேரி - தாராவி
பத்துக்குப் பத்து இடத்தில் பத்து ஏணிக் கட்டில்களை வைத்து பொந்துகளைப் போல பதுங்கி வழியும் சேரிகளின் நகரத்தில் அரபிக் கடலைப் பார்த்தவாறு எக்காளத்துடன் எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. உலகின் முதல் பணக்காரர் தங்கப் போகும் அந்த மாளிகையை பல்லாயிரம் தொழிலாளிகள் ஏழு ஆண்டுகளாக கட்டி இல்லை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு ஆஸ்திரேலியா நிறுவனமும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்த பெருமை மிகு இந்தியனது மாளிகையை கட்டி முடித்திருக்கின்றன.
அக்டோபர் 28 இல் திறக்கபட உள்ள இந்த மாளிகையின் பால் காய்ச்சும் நிகழ்விற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருகிறாராம். மத்திய அரசின் பட்ஜெட்டே ரிலையன்சின் அலுவலகத்தில் திருத்தப்பட்டு வெளிவரும் காலத்தில் பிரதமர் ரிலையன்சின் உரிமையாளர் வீட்டு திருவிழாவிற்கு வருவது பொருத்தமானதுதான். மத்திய அரசு கிராமத்து மக்களுக்கு வீடு கட்டிக்க கொடுக்கும் திட்டத்தின்படி வீடு ஒன்றுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அறுபதாயிரம் மட்டும்தான். இதேதொகை அம்பானி வீட்டில் எச்சில் துப்பும் ஒரு கிண்ணத்தின் விலையருகே கூட வராது. விருந்தினர்களில் பிரதமரே இருப்பதால் மற்றவர்களை இங்கே நாம் பட்டியலிட வேண்டியதில்லை.
நடுத்தர வர்க்கத்தின் கனவில் முதலிடம் பிடிப்பது வீடுதான். அந்தக் கனவிற்காக படும் ‘துன்பங்களை, தியாகங்களை’ பாலுமகேந்திராவின் “வீடு” திரைப்படத்தில் கண்டு உருகாதவர் எவருண்டு? இல்லை “காணி நிலம் வேண்டும், பராசக்தி” என்று பாரதியின் படிமங்களில் மூழ்காதவர் யார்? குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஒரு வீட்டைக்கட்டி முடித்துவிடுவதிலேயே வாழ்க்கை கழிந்துவிடுமென்றாலும் அந்த இன்பமான துன்பத்தை நடுத்தர வர்க்கம் விரும்பித்தான் செய்கிறது.
அந்த நடுத்தர வர்க்கம் பிறந்த நாளுக்கு விழா வைத்து கொண்டாடும் இந்த நாட்டில்தான், இதே நாட்டில்தான் பிறந்த தேதி கூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?
ஆனாலும் அம்பானியின் மாளிகை சாதாரண நடுத்தரவர்க்க கனவின் வெளிப்பாடு அல்ல. அது பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை பறைசாற்றும் ஒரு பிரகடனம். எனினும் அந்த மாளிகைக்கு அம்பானி வைத்த பெயர் ஆன்டிலியா. பொருள் என்ன? அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு மர்மமான தீவின் பெயராம் அது. பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. அதாவது அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.
இந்திய முதலாளிகளிலேயே ஏமாற்று, மோசடி, அதிகார பலம், அரசியல் துஷ்பிரயோகம் அனைத்திலும் சாதனை படைத்து தனது பேரரசைக் கட்டியவர் செத்துப் போன அம்பானி. அவர் சேர்த்த சொத்து அனைத்தும் மொள்ளமாரி, முடிச்சவிக்கி வழியில் வந்ததுதான். அம்பானி வளர்ந்த கதையில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க முடியாது. ஆக அந்த வரலாற்றுக்கு உகந்த விதத்தில்தான் இந்த மர்ம மாளிகைக்கு ஆன்டிலியா பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.
விரைவில் ஆன்டிலியா மாளிகையின் அருமை பெருமைகள் குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியடலாம். ஊடகங்கள் அதன் சிறப்புகளை வியந்தோதி வரும் நாட்களில் பொழிப்புரை செய்திகளை தரலாம்.
ஆன்டிலியா உருவான விதம் குறித்த புள்ளி விவரங்கள் தினசரிகளை நிரப்பலாம். ஆனாலும் ஆன்டிலியாவின் பின்னே தூக்கில் தொங்கிய விவசாயிகளின் புள்ளிவிவரங்களும் இருக்கத்தான் செய்கின்றது. மதிப்பு பெறும் புள்ளிவிவரம் எதுவென்று சொரணை வரும்போது ஆன்டிலியாவின் மதிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.  அதுவரை புள்ளிவிவரங்கள் ஆபாசமாக ஆட்டம் போடும். இரசிப்பீர்களா, காறி உமிழ்வீர்களா?

"ஈ" என்னும் நோய் பரப்பி

இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மல ஜல கழிப்பறை, சுகாதாரம் குறைந்த குப்பைத்தொட்டிகள் போன்ற இடங்களில் மிகவசதியாக வாழ்கின்றன.

பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டை கள் வரை இடுமாம்.
ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன என்பதே உண்மை!



ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது. இந்த பிசின், ஒருவித பசை பொருளாகும். கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன. ஈ, மீண்டும் நம் மீதோ அல்லது உணவின் மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன.

இதன் விளைவால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உட ல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபா ய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.

தற்போது தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.

இப்படி பல வகைகளில் தொல்லைகொடுக்கும் ஈக்களிடமிருந்து நம்மையும், நாம் வாழும் சுற்றுசூழலையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது:

-- அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல்.

-- அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல்.

-- வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்றுதல்.

-- உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தல்.

-- வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்தி விடுதல்.

--கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. (இதனால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்).

-- ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து அவைகள் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம்.

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்


தள்ளாத வயதினர்
++++++++++++++++

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். (நூல்: புகாரி 4505)

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!

நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.

பின்னர், ரமளானை அடைபவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.

இதைத் தான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும், தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.

நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.

ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளித்தல் என்பது வசதியுள்ளவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் தான் சாத்தியமாகும். சாத்தியமில்லாதவர்கள் சமுதாயத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். (பார்க்க: அல்குர்ஆன் 6:152, 7:42, 23:62, 2:286, 65:7, 2:223)
ஒரு நபித்தோழர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது, அவரிடம் பரிகாரம் செய்ய ஏதுமில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்.

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலும், இந்த நபிவழியின் அடிப்படையிலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள், ஏழைக்கு உணவளிக்கவும் சக்தி பெறவில்லை என்றால் அவர்கள் எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள்.

ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.

நாங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2839, 4423)

இறைவன், அடியார்கள் விஷயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முதுமையின் காரணமாகத் தான் நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர் எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.


அப்பாக்குட்டி புதுவலசை: மயிர் குச்செரியும் விபத்து! ஓட்டுனர் தப்பித்தது எப...

அப்பாக்குட்டி புதுவலசை: மயிர் குச்செரியும் விபத்து! ஓட்டுனர் தப்பித்தது எப...: அதி வேகமாக வந்த கனரக லாறி, குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளை அதிரடியாக மோதுகிறது. மோதுகைக்கு பின்னர் மோட்டார் சைக்கிள் சுக்கு ந...

Monday, July 23, 2012

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டதா...??

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டதா...??

அதற்கான முதல் உதவி::


மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.


கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.


நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.


தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.


வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.


சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.


வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.


எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.


பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.


பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.


நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.



இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

நபி மொழிகள் சில





635. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி ) Volume :1 Book :10




636. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :10



தொழுகைகக்காக இகாமத்து சொல்லப்பட்டுவிட்டால் (எந்த) ஃபர்ளான தொழுகைக்காக இகாமத்து சொல்லப்பட்டு விட்டதோ அதைத்தவிர (வேறு) தொழுகை இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா (ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஸ்லிம் : ஹதீஸ் எண் : 263 )




691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :10




934. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :11



1163. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்'.
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :19



177. 'காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :4




751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி ) Volume :1 Book :10



597. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை."
"என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக" (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :9



822. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது."
என அனஸ்(ரலி) அறிவித்தார்
(புஹாரி ) Volume :1 Book :10


நீங்கள் ஸஜ்தா செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல அமர வேண்டாம்
உங்கள் முழங்கால்களை (தரையில் ) வைப்பதற்கு முன் பாக உங்கள் கரங்களை
வையுங்கள் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

ஆதாரம் :: ( திர்மிதி )

சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ???

இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும், ஆய்வாளர்களும், அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.


முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
1.தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.
2.தனிமையை அதிகம் விரும்புவது.
3.பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.
4.அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.
5.ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.
இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.
இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது?
மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள்.இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.
ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப் படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே!
“(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.”(23:5,6,7)
மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீர்த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.
அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.” (நூல் : அஹ்மத் 10490)
மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்)அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.
அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது,ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.
இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும்,அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.
ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப் படுத்துகிறது.
உண்மையில் அல்லாஹ்வை ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.
அதிலும் அல்;லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூhத்தி செய்வதற்கு முனைவதோ,அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது
“(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (24:24)
“இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (36:65)
“முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (41:20)
மேற்கண்ட குர் ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.
ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி, நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.
இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.
சுய இன்பத்தின் மூலம் ஏற்படும்(உடலியல்)விபரீதங்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.
இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும்,வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.
நமது பதில்:
ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று. அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ,அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.
ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில். அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை. ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும், மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம், குற்றமே!
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப் படும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.
நமது பதில்:
சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.
உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.
உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.
உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.
அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.
இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.
அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.
சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.
அவர்களின் வாதம்:
சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
நமது பதில்:
சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.
அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.
சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம்,அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது.ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது,அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால்.அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.
தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா? இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.
விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும்.” (புகாரி : 1905)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“நானும், அல்கமா, மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி,வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும். என்று சொன்னார்கள்.” (புகாரி : 5066)
நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத, ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி(ஸல்)அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.
நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இப்னு மஸ்¥த்(ரலி)அவர்கள் கூறியதாவது :
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.” (புகாரி : 5071)
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி)அவாகள் நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.” (புகாரி : 5075)
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை” (5:87)
குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.
மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.
மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.
நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.
மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.
ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.
“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்.” (2:173)
வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம், நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.
தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.
இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.
ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக!