Digital Time and Date

Welcome Note

Tuesday, July 3, 2012

கடல்குதிரை (Sea Horse)

 
மனிதன் திறமைக்குச் சவால் விட்டு தனது தீராத அறிவுப் பசிக்கு ஓயாது உணவளித்துக் கொண்டு அவனின் தலைக்கு மேலே பரந்து விரிந்துக் கிடக்கும் 2500 கோடி ஒளி ஆண்டுகளை கொண்ட பால் வெளி இரகசியத்தை அறிய ஆசைப்பட்டான். விளைவு வானவியல் என்னும் முற்றுப் பெறாத ஒரு புத்தகத்தின் முன்னுரையை ஆரம்பித்து வைத்தான்.

இத்தகைய மனிதனுக்கு இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்குடைய கடலைப் பற்றியும் அதில் வாழக்கூடிய உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பொருட்களின் மூலமாகிய அணு ஆராய்ச்சிக்கென்று ஒரு துறை, இரசாயம், பௌதீகம், உயிரின ஆய்வுக்கென விலங்கியல், தாவரவியல் போன்ற துறை, பூமியின் உள் இரசியங்களைக் கண்டறிய புவியியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு துறையை ஏற்படுத்திய மனிதன் கடலுக்கென்று ஒரு துறையை ஏற்படுத்தி அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர ஆசைப்பட்டதில் என்ன வியப்பு இருக்கின்றது?

இதற்கென்று கடலும், கடலியலும் என்ற துறையை
(ocean and oceanography) ஏற்படுத்தி கடலை தன் வசப்படுத்த முயற்சிகள் தொடருகின்றன. இதற்கென்று ஒரு புறம் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு இருப்பினும் கூட ஆராய்ச்சியின் முடிவுகள் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல என்ற முடிவின் பக்கம்தான் நம்மை தள்ளுகின்றன. எந்த ஒரு கடல் இரகசியமாகட்டும் அதை அறிய அவன் கொடுக்கும் விலை மிகக் கூடுதலாகும். ஏனென்றால் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது கடல் நீரின் அளவிடற்கறிய அழுத்தத்தையும் ஆழ்கடலின் அடர்ந்த இருளையும் கடந்துதான் இவனால் எதை ஒன்றையும் கண்டறிய இயலும். அது ஒரு வேற்று கிரகத்தை ஆராய முயற்சிப்பதை போன்றே அல்லாது இலகுவான காரியமாக அவனுக்கு இருக்கவில்லை. அதாவது சுருக்கமாகச் சொன்னால் கடலுக்கடியில் ஒரு வித்தியசமான வேறுபட்ட ஒரு உலகம் இருக்கின்றது என்பதுதான் உண்மையாகும். அறிவியல் ஆய்வுக்கூடங்களின் நுண்ணோக்கிக்கு மட்டும் காட்சி தரும் நுண்ணுயிரிகள் முதல், பிரமாண்டமான உயிரினங்கள் வரை அதில் வாழுகின்றன. இத்தகைய கடல் வாழ் உயிரினங்களின் அதிசய செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை போன்ற பல தகவல்கள் பல சமீப காலங்களில் மனிதனால் கண்டறியபட்டுள்ளது.

இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத ஓர் அதிசய உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு இராட்சத ஸ்கொய்ட்
(giant squid) பற்றிய ஒரு உண்மை அறிவியல் உலகை அதிசயத்தில் ஆழ்த்தியது. இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் புரியாத புதிர்களை உள்ளடக்கிய உயிரினம் என்று அறிவியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது ஒரு பெண் இராட்சத ஸ்கொய்டை பிடித்து ஆராய்ந்த போது அதன் முன்புற தசைகளினோடே ஆணுடைய விந்தணு, மாத்திரை வடிவில் இருக்கக் கண்டார்கள். அந்த மாத்திரையின் உள்ளே லட்சக் கணக்கான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார்கள். ஆண் ஸ்குவாட் தன் விந்தணுவை பெண்ணின் தோல் பகுதியில் வைத்து அதிக அழுத்தம் (hydraulic pressure) கொடுத்து உள் செலுத்துகின்றது. அந்த இடத்தில் ஏற்படும் சிறிய காயம் விரைவில் ஆறிவிடுகின்றது. அதன் உள்ளே அந்த விந்தணு மாத்திரையை தக்க வைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்வதைக் கண்டறிந்துள்ளார்கள். அந்த விந்தணுவோ மாத்திரை அமைப்பில் (capsule) லட்சக்கணக்கான உயிரணுவை உள்ளடக்கி அமைந்திருப்பது அறிவியல் உலகம் இதுவரை காணாத அதிசயமாகும். இந்த உண்மையைக் கண்டறிந்த அறிவியலார்களினால் அந்த விந்தணுவை எவ்வாறு பெண் இராட்சத ஸ்வாட்கள் பயன்படுத்தி சந்ததிப் பெருக்கம் செய்கின்றன என்பதைப் பற்றிய தகவல் இதுவரை கணடுபிடிக்க முடியவில்லை. ஏன் என்றால் இவை வாழும் ஆழ்கடலின் இருள் இந்த உண்மையை வெளிச்சத்திற்கு வர தற்சமயம் தடையாக இருக்கின்றது. எதிர் வரும் காலத்தில் மனிதன் கண்டறியக் கூடும்.

எனவே பல பதில் தெரியாத விஷயங்களை உள்ளடக்கிய ஒரு துறைதான் கடற் துறை ஆகும். இத்துறையில் சமீபகால ஆய்வில் கண்டறிந்த உண்மைகளில் ஒன்றுதான் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் அதிய ஆண் கடல்குதிரைகளைப் பற்றியதாகும்.

கடல் வாழ் உயிரினங்களாகட்டும் அல்லது தரை வாழ் உயிரினங்கள் ஆகட்டும் இவை எல்லாவற்றைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு அம்சத்தைப் பெற்று விளங்குவது கடல்குதிரையாகும். கற்பம் தரித்து தன் சந்ததியை சுமந்து பெற்றெடுக்கும் தந்தைகள்தான் கடல்குதிரையாகும். இத்தகைய தன்மையை பெற்று விளங்குவதால் நம் தொடரின் நோக்கத்திற்காக பெற்றெடுக்கும் தந்தைகளைப் பற்றிய செய்தியை அறிவோம்.

கடல்குதிரை என்று சொன்னவுடன் குதிரையின் ஏதோ ஒரு அம்சத்தைப் பெற்றிருக்கும் என்பது சொல்லாமலே உங்களினால் விளங்கிக் கொள்ள முடியும். பொதுவாக நன்கு அறிந்த ஒன்றினை அறியாத ஒன்றிற்கு உவமையாக சொல்லக் கூடிய சொல் வழக்கு நம்மிடம் கால காலமாக இருந்து வருகின்றது. உதாரணமாக கடல் பசு. இது நம் பசுவை ஏதோ சில அம்சத்தில் ஒத்திருக்கும் ஆகவே அதை கடல் பசு என்றும் கடல் சிங்கம், கடல் யானை, கடல் நாய் இதுப்போன்று எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும்.
 

இந்த கடல்குதிரையைப் பொறுத்த வரையில் அதன் முக அமைப்பு மட்டுமே குதிரையின் அமைப்பில் அமைந்திருக்கின்றதே தவிர மற்ற எந்த வித ஒற்றுமையும் இல்லை.

 
கடல்குதிரை என்பது மிகச் சிறிய மீன் இனத்தை சேர்ந்த உயிரினமாகும். 2.5 செ.மீ முதல் 35 செ.மீ வரை அளவில் 35க்கும் மேற்பட்ட வகைகள் உலகின் எல்லா கடற் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை கடலின் ஆழம் குறைந்த பகுதிகளிலும் கடலின் ஓரப்பகுதியில் கடல் பாசிகளுக்கிடையே வாழுகின்றன. இவற்றின் முக்கிய உணவு இறால் மற்றும் சிறிய மீன் வகைகளாகும். தன் உடலின் மேற்பகுதி கடினமான ஓட்டைப் போன்ற கவச அமைப்பு கொண்டுள்ளது. இது இவற்றின் முக்கிய பாதுகாப்பு அம்சமாகும். மேலும் இவை பெற்றுள்ள மற்றுமொரு பாதுகாப்பு அம்சம் சூழலுக்கேற்றார் போல் தங்கள் நிறத்தை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல், நன்கு அறியப்பட்ட பச்சோந்தி எனப்படும் பல்லி வகைகளைக் (anole, Chamelein) காட்டிலும் தங்கள் நிறங்களை மாற்றும் ஆற்றல் பெற்றதாகும். தங்கள் எதிரியிடமிருந்து தப்பிக்கும் போது அவை கடல் பாசிகளினிடையே பாசிகளைப் போன்று தங்களை முற்றாக மாற்றிக்கொள்வதன் மூலம் பெருமளவிற்கு எதிரியின் கண்களைக் கட்டி தப்பித்துக் கொள்கின்றன. இவற்றின் உடலின் உட்புறம் அமைந்த காற்றுப் பைகளில் காற்றை நிரப்பி வெளியேற்றுவதன் மூலம் நீரின் மேலும் கீழும் செல்ல ஏதுவாயிருக்கின்றது.

ஆற்றலை அளக்க அடிப்படை அலகாக குதிரையின் திறனைப்
(horse power) பயன்படுத்துவதை அனைவரும் அறிந்து இருப்போம். ஒரு குதிரைத் திறன் என்பது 33,000 பவுண்டு எடையுடைய ஒரு பொருளை ஒரு நிமிடத்தில் ஒரு அடி உயரத்திற்குத் தூக்கினால் அங்கு செயல்படும் ஆற்றல் ஒரு குதிரைத் திறன் என்று வரையறுத்து வைத்துள்ளார்கள்.

குதிரையின் ஓடும் திறனைக் கணக்கில் கொண்டுதான் ஆற்றலை குதிரைத் திறனில் சொல்லும் வழக்கம் வந்தது. ஆனால் இந்த புல் தடுக்கி (விழும்) பைல்வான் கடல்குதிரையின் லகானை முடுக்கி விட்டால் கூட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இது எடுத்துக் கொள்ளும் காலம் மூன்று நாட்களாகும். ஆம்! மூன்று நாட்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் வேகம்தான் இதனுடையதாகும். இனி மிகக் குறைந்த வேகத்திற்கு ஆமையை உதாரணம் சொல்வதை விடுத்து கடல்குதிரையை சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

கடல்குதிரை இனத்தில் மாத்திரமே ஆண் இனம் தங்கள் சந்ததியை சுமந்து பெற்றெடுக்கின்றன என்பது நிச்சயமாக இறைவனின் அத்தாட்சிகளினின்றும் உள்ளதாகும். மனிதனைப் பொருத்தவரை எந்த ஒரு உயிரினத்தைப் பற்றியும் அறிந்துக் கொள்ளும் அறிவை பெற்றுள்ளானே தவிர அதற்கான காரண காரியத்தை பற்றித் தெளிவு படுத்தும் அறிவு மனிதனிடம் இல்லவே இல்லை.

மேலும் தன் சக்தியைக் கொண்டு ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளை தன் இச்சைப்படி மாற்றி அமைக்கும் ஆற்றலும் பெற்றிருக்கவில்லை. இறைவன் மனிதனுக்கு எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தது பயன் பெற்று அதன் மூலம் படிப்பினைப் பெற்று அந்த ஏக இறைவனை மகிமைப் படுத்தத்தான்.

பெண் கடல்குதிரைகள் ஒரு நேரத்தில் 200 முட்டைகள் வரை இடக்கூடிய இயல்பைப் பெற்று விளங்குகின்றன. ஆண் கடல்குதிரைக்கு பெற்றெடுக்கும் தேவை இருப்பதானால் இவை காதல் பாக்களைப் படித்து பெண் இனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கின்றன. இவற்றால் கவரப்பட்டு வந்தாலும் பெண் கடல்குதிரைக்கு எந்த குறைவோ எந்த சுமையோ ஏற்படுவதில்லை. மடியில் இருக்கும் கனத்தை இறக்கி வைக்கும் விதமாக கரும்புத் தின்னக் கூலியா என்பதைப் போல அவை வந்த வேகத்தில் ஆண் கடல்குதிரைக்கு மட்டும் இருக்கும் பிரத்யேகமாக வயிற்றுப் பகுதியில் அமைந்த தோல் பையில் முட்டைகளை இட்டு தன் வழியைப் பார்த்து நடையைக் கட்டிக் கொள்கின்றன. அந்த முட்டைகள் குஞ்சு பொறிக்கும் தன்மையில்லாத மலட்டு முட்டைகளாகும். அதன் பிறகு ஆண் கடல்குதிரை அதில் தன் உயிர் அணுவை செலுத்தி அந்த முட்டையை சூல் கொள்ளச் செய்கின்றது. அதன் பிறகு அதை 40 முதல் 50 நாட்கள் வரை தன் வயிற்றிலேயே வைத்திருந்து பிறகு பெற்றெடுக்கின்றது. பிறந்த குஞ்சுகள் தன் தாயைக் காட்டிலும் தன் தந்தைக்கே அதிக கடமைப்பட்டுள்ளன. நான் தாயுமானவன் தந்தையானவன் என்று உவமையாக அல்லாது உண்மையில் உரிமை கொண்டாட தகுதி படைத்தவைகள் இவைகள்.

கடலில் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினால் கடல்குதிரை மட்டுமல்லாது கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து வரும் அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கின்றன. எண்ணெய் கப்பல்களில் ஏற்படும் விபத்துக்களினால் கடல்நீரில் கொட்டும் எண்ணெய், பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை அழித்துவிடுகின்றது. இத்தகைய நிலையால் கடல்குதிரையின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

நவீன மீன்பிடி தொழில் வளர்சியில் ஏற்பட்ட புரட்சியினால் இனப்பெருக்கத்திற்கு கூட விட்டு வைக்காத அளவிற்கு சல்லடைப் போட்டு சலித்து பிடிக்கப்படும் மீன்களினால் அடுத்த பருவ சந்ததிப் பெருக்கத்திற்கு பெருமளவிற்கு பாதிப்பு போன்ற பல காரணங்கள் சொல்ல முடியும். மேலும் கடல்குதிரை மருத்துவப் பயன்பாட்டிற்காகவும், காம உணர்வை அதிகப் படுத்தும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் அதிக அளவிற்கு ஆசியப் பகுதியில் வேட்டையாடப்படுகின்றன.

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் கடல்குதிரைக்கு இருப்பதாக சீனர்களினால் நம்பப்படுகின்றது. மேலும் உணவுத் தேவைக்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

உண்மையில் பெற்றெடுப்பதென்பது பொதுவாக பெண் இனத்தைச் சார்ந்த விஷயமாக இருப்பினும் கூட இதில் மட்டும் இறைவன் இந்த விதிவிலக்கான அம்சத்தை வைத்து படைத்திருப்பதென்பது என்னால் முடியாத ஒன்றும் இல்லை என்பதை பறைசாற்றும் முகமாகத்தான் என்பதை விளங்கிக் கொள்ளும் போது அந்த உள்ளத்தில் அக இருள் நீங்கி ஒளி பரவுவதை அறிந்துகொள்ள முடியும். இதை விடுத்து இத்தகைய அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முயற்சிப்பவன் அழகிய நல்ல செயலை செய்வதாக எண்ணித் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை. இத்தகைய அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை உணர்ந்து நம் நம்பிக்கை பலப்படக்கூடிய நல்ல மக்களில் நம்மை ஆக்கி வைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் ஆதரவு வைப்போமாக.

நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோரை அவர்கள் நம்பிக்கைக் கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்கு கீழே ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும். (அல்குர்ஆன் 10:9)

No comments:

Post a Comment