Digital Time and Date

Welcome Note

Wednesday, August 1, 2012

தாய்ப் பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிசம்.......


 
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா?” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.

இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.

வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.

சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.

பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம், குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது, காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி , பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.

குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான, காற்று , நீர், மற்றும் அதற்கு தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற – நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் – வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம், மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக, காச நோய், மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்....

No comments:

Post a Comment