Digital Time and Date

Welcome Note

Saturday, August 18, 2012

உண்மையான காரணங்கள் என்ன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் ?
நூலாசிரியர்: பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள.


 
உண்மையான காரணங்கள் என்ன
அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சராசரி மனிதர்கலில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித் தூதர் எனப் பிரகடனப்படுத்தினார்கள். தம்மைத் தூதர் எனப் பிரகடனம் செய்தது முதல் உலக முடிவு நாள் வரை அவர்கள் தாம் இறைத்தூதர். உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய எல்லா மாந்தர்களுக்கும் அவர்களே வழிகாட்டியாகவும், அழகிய முன்மாதிரியாகவும் திகழ வேண்டியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் எனும் இவ்வுயர் பதவி மற்ற பதவிகளைப் போன்றதல்ல. இப்பதவியை அடைந்தவர் தம் வாழ்க்கையைப் பரிசுத்தமாக அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு அப்பதவிக்கு உரியவருக்கு ஏற்பட்டு விடுகிறது.

அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானது; அப்பழுக்கற்றது என்று உலகின் முன் நிரூபிக்கப்பட்டாக வேண்டும். கலங்கமற்ற அந்த வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியாததாகவும் இருக்க வேண்டும். அவரது வாழ்வை எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் அதன் தூய்மை பளிச்சிட வேண்டும். அப்போது தான் இறைத்தூதர் என்று அவரை ஏற்க முடியும். ஏற்கனவே ஏற்றவர்களின் நம்பிக்கை மேலும் உறுதியடைய முடியும்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை அளந்து பார்க்கின்ற சரியான அளவு கோள் அவனது இல்லற வாழ்க்கை தான். வெளி உலகில் நல்லவனாக எவரும் நடித்திட முடியும். புனிதனாக, புன்னிய ஆத்மாவாக, திருவாளர் பரிசுத்தமாக,ஒழுக்க சீலனாக, குணக்குன்றாக, வள்ளலாக இன்னும் இது போன்ற எந்த வேடத்தையும் ஏற்று உலக மேடையில் நடித்து விடலாம். எல்லா வேடத்தையும் ஏற்றுக் கூட ஒருவன் திறம்பட நடித்து விட முடியும். மக்கள் அதை உண்மையென்று நம்பிவிடவும் முடியும். ஆனாலும் வீட்டில் அவனால் நடிக்க முடியாது. அவனது வாழ்க்கையிலும் பங்காளியாகத் திகழும் மணைவியின் முன்னே அவனது சுயரூபம் நிச்சயம் வெளிப்பட்டு விடும்.

ஒவ்வொரு பெண்ணும் தம் கணவன் பரிசுத்த ஆத்மா தானா? அல்லது பகல் வேஷக் காரண் தானா? என்பதைத் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மணைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும்,பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மணைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நல்லவனாக வெளி உலகுக்குத் தெரிகின்ற ஒரு மணிதன் உண்மையிலேயே நல்லவன் தானா? என்பதைச் சோதித்து அறிய அவனுக்கு இரண்டு மணைவியர் இருந்து இருவருமே அவனைப் பற்றி நற்சான்று தந்து விடுவது மிகச் சிறந்த ஆதாரமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்கு போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதார மனம் மிகச் சிறந்த அளவு கோளாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மணைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

ஸைனப் பின் ஜஹ்ஷ் (ரலி) எனும் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பருகுவதற்காக தேன் சேகரித்துக் கொடுப்பார்கள். அதை அருந்துவதற்காக அடிக்கடி அந்த மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். ஆயிஷாவுக்கும், ஹப்ஸாவுக்கும் இது பொறாமையாக இருந்ததுண்டு. ஆனாலும் இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி குறைவாக எதையும் அவர்கள் பேசினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அவர்களால் குறை காண முடியாதவாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்கு செயல் வடிவம் கொடுக்க நல்லிறவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல் படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், பல சமயங்களில் காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக் காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியடம் கூட இந்தப் பொறுமையைக் கடைப் பிடித்து பண்பாடுகளில் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டு பிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான். அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆன் ஆகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப் பிடிக்கப் பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும் நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிற மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

ஒரு கணவன் பல மணைவியரைப் பெற்று அவர்களைச் செல்வ செழிப்பில் வைத்திருக்கும் போது வேண்டுமானால் அவனது அந்தரங்க வாழ்க்கை மனைவியரால் அம்பலப்படுத்தப் படாமல் மறைக்கப்படலாம்.

இம்மாமனிதரைக் கணவராகப் பெற்றவர்களோ வறுமையையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப் பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.

எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்கார்ர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது. இது மட்டுமே காரணம் அல்ல இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்.

இறைவனது தூதர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இடையே ஏறாளமான வித்தியாசங்கள் உள்ளன. அரசியல் தலைவர்களாகட்டும்! குறிப்பிட்ட துறையில் காணப்படும் தவறுகளைக் களையெடுக்கும் இயக்கங்களின் தலைவர்கள் ஆகட்டும்! இவர்கள் மக்களுக்குக் கட்டளை இடுபவர்களாகவோ, குறிப்பிட்ட சில விஷயங்களைப் பிரச்சாரம் செய்பவர்களாகவோ மட்டும் இருப்பார்கள். அப்படி இருந்தால் போதும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள்.

அரசியல் தலைவர்கள் என்றால் அவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களின் உயிர் உடமை, கற்பு போன்றவற்றை பாதுகாப்பவர்களாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அளவுக்குத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். (அரசியல் வாதிகள் அப்படி நடந்து கொள்வதில்லை என்பது தனி விஷயம்.)


இந்த அரசியல் தலைவரிடம் போய் எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணக் கூடாது என்றோ எவற்றை விற்கலாம்? எவற்றை விற்கக் கூடாது என்றோ, எத்தகைய உறவுகளை மணக்கலாம்? எவரை மணக்கலாகாது என்றோ கேட்க முடியாது. இல்லறத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளுக்கோ, பெற்றோரிடமும்,மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளுக்கோ இன்ன பிற துறைகளுக்கோ வழிகாட்டுதலைப் பெற முடியாது.


எந்தத் துறையைச் சார்ந்த தலைவர்களது நிலையும் இதுவே ஆகும். ஆனால் இறைத்தூதர்கள் எனப்படுவோரின் நிலை இவ்வாறானதன்று.


இறைத் தூதர்கள் என்போர் சிறந்த அரசியல் தலைவராகத் திகழ வேண்டும். தமது பிரஜைகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்பவராக இருக்க வேண்டும். உலகத்தில் எத்துனை துறைகள் உள்ளனவோ அத்துனை துறைகளிலும் சரியான வழி இது தவறான வழி இது என்பதை கற்றுத் தருபவராக இருக்க வேண்டும்.


பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரையிலும், உறங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் உறங்கும் வரையிலும் மனிதனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்ட இறைத் தூதர் கடமைப்பட்டவர் ஆகின்றார். அவரது வாழ்க்கை ஒழிவு மறைவின்றி திறந்த புத்தகமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும். அவருடைய போதனைகள் மட்டுமின்றி அவரது நடத்தைகளும் கூட பின்பற்றப்படத் தக்கதாக இருக்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுவதும்,என்னிடமிருந்து சிறிய விஷயம் உங்களுக்குத் தெரிந்தாலும் அதைப் பிறருக்கு அறிவித்து விடுங்கள் என நபியவர்கள் கூறியிருப்பதும் இதனை நமக்கு விளக்கிடப் போதுமானதாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவை, செய்து காட்டியவை, அவர்கள் முன்னிலையில் மற்றவர் ஒரு காரியத்தைச் செய்யும்போது நபியவர்களால் அங்கீகரிக்கப் பட்டவை யாவும் யுக முடிவு நாள் வரையிலும் தோன்றக்கூடிய மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. பொதுவாகவே எல்லா இறைத்தூதர்களின் போதனைகளும், அவர்களின் முழு வாழ்க்கையும் மக்களிடம் வைக்கப்பட வேண்டும் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக் தூதர் என்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வெளியே நடந்து கொண்ட முறைகளையும், வீட்டுக்கு வெளியே செய்த போதனைகளையும் அவர்களின் அன்புத் தோழர்கள் மிகவும் உண்ணிப்பாக கவனித்து அடுத்த தலைமுறையினருக்கு அந்தச் செய்திகளை எட்டச் செய்தார்கள்.


இந்தப் பணியைச் செய்ய பல்லாயிரக் கணக்காண அவர்களின் தோழர்கள் தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.


ஆனால் அவர்கள் வீட்டுக்குள்ளே நடத்திய வாழ்க்கையை வீட்டாரிடம் நடந்து கொண்ட முறைகளை, வீட்டுக்குள் அவர்கள் செய்த போதனையை அந்த்த் தோழர்களால் அறிய இயலாது. எந்த ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கையையும் அவனது மனைவியைத் தவிர மற்றவர்களால் அறியவே முடியாது.


நபியவர்கள் வீட்டுக்குள் நடந்து கொண்ட முறை மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அவர்களின் மனைவியர் வழியாக மட்டுமே சென்றடைவது சாத்தியமாகும்.


வீட்டில் நடக்க வேண்டிய அவர்களின் உணவு உண்ணுதல், உறங்குதல் இரவு நேர வணக்கங்கள், இல்லற வாழ்க்கை போன்றவற்றைச் சமுதாயம் அறிவதற்கு அவர்களின் மனைவியரை விட்டால் வேறு வழியில்லை.


அவர்களின் வெளி உலக வாழ்க்கையை அறிவிக்க பல்லாயிரக்கணக்கான தோழர்கள் தேவைப்படும் போது அவர்களது வாழ்க்கையின் மற்றொரு பகுதியை அறிவிக்க ஒரேயொரு மணைவியால் சாத்தியப் படாது. அவர்கள் வீட்டுக்குள் செய்த போதனைகள் அத்தனையும் ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய ஒன்றிரண்டு மனைவியரால் சாத்தியப்பட்டிருக்காது.


இஸ்லாமியச் சட்டங்களில் சுமார் சரிபாதி சட்டங்கள் அவர்களின் மனைவியர் வாயிலாகவே உலகுக்கு கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மனைவியரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு வரம்பு ஏதும் இருந்திருக்குமானால் ஏராளமான சட்டங்கள் உலகுக்குக் கிடைத்திருக்வே முடியாது.


பெண்கள் தங்களின் பிரத்தியேகமான விஷயங்களையும், மாதவிடாய் பிரசவத்தீட்டு போன்றவற்றை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மனைவியர் வாயிலாக அறிந்தார்கள் என்பதில்லை. எப்படி உண்டார்கள்? எப்படி உறங்கினார்கள்? இரவுப் பொழுதை எப்படிக் கழித்தார்கள்? எப்படிக் குளித்தார்கள்? என்பதை அந்த மனைவியரிடம் கேட்டே ஆண்களும் கூட அறிய முடிந்தது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவணிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்க்கான காரணமாகும்.


இறைத்தூதர் தவிர மற்றவர்களுக்கு இந்தக் காரணம் பொருந்தாது. மற்றும் சில காரணங்களையும் பார்ப்போம்.


நபியவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் இறைவனால் தூதராக அனுப்பப்பட்டவர்கள். அவர்களின் சொற்கள்,செயல்கள், அங்கீகாரங்கள் யாவும் அவர்களை இறைத்தூதராக நம்பிய அனைவராலும் அவசியம் பின்பற்றப் பட வேண்டியவைகளாக உள்ளன. இந்த உயர்வான தகுதியை அவர்களுக்கு வழங்க வேண்டுமானால் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தமானதாகவும், கலங்கமற்றதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.


தூய்மையாக அவர்கள் வாழ்வது மட்டும் கூட போதாது. அவர்களின் தூய வாழ்க்கையில் சந்தேகத்தின் சாயல் கூட படியக் கூடாது. சீர்திருத்தவாதிகள் அனைவரிடமும் உலகம் இந்தத் தகுதியை எதிர்பார்கிறது. இது நியாயமான எதிர்பார்ப்பும் கூட. முழு உலகுக்கும் முழுமையான வழிகாட்டுதலை தரக் கூடிய நபியவர்களின் வாழ்க்கை நிச்சயம் இந்த அம்சத்தைப் பெற்றிருக்க வேண்டும்.


அகில உலகுக்கும் வழிகாட்டியாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒழுக்க வாழ்வில் சந்தேகம் தோன்றிவிடுமானால் அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த தூதுச் செய்தியே சந்தேகத்திற்கு உரியதாகிப் போகும்.


மிகவும் சிறந்த சீர்திருத்தவாதியாக்க் கருதப்படுபவரிடம் ஒழுக்க்க் கேடான செயல்கள் நிகழும் பேதும், அவருடைய ஒழுக்கத்தில் சந்தேகம் ஏற்படும் போதும் அவரது கருத்துக்களும் ஒதுக்கப்பட்டு வருவதைச் சாதாரணமாக நாம் கண்டு வருகிறோம்.


இந்த அடிப்படையை ஆழமாக மனதில் பதித்துக் கொண்டு நபியவர்கள் வாழ்வை நாம் அலசுவோம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கிய போது உலகில் எந்த சீர்திருத்தவாதியும் சந்தித்திராத எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.


மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள், மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப் பட்டார்கள்.


எப்படியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.


இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித் தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.


இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.


பொதுவாக ஒரு மனிதனின் மனைவி முதிய வயதுடையவளாக இருந்தால் - அவனிடம் ஒழுக்கம் இல்லாத போது - இளம் வயதுப் பெண்னை விரும்புவான். அல்லது மனைவி இளம் வயதுடையவளாக இருக்கும் போது முதிர் வயதுப் பெண்ணையும் விரும்பக்கூடும்.


மனைவி கருப்பாக இருக்கும் போது சிகப்பு நிற பெண்னை விரும்புவதும், மனைவி சிகப்பாக இருக்கும் போது கருப்பு நிறப் பெண்னை விரும்புவதும் கூட ஆண்களில் பலரது இயல்பாக உள்ளது.


உயரமாக இருந்தால் குட்டையானவளை விரும்புவதும், மெலிந்தவளாக இருந்தால் பருமனானவளை விரும்புவதும் கூட ஆண்களின் பலருடைய இயல்பாக உள்ளது. இந்த இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மனோபாவம் எல்லோரிடமும் காணப்படாவிட்டாலும் பலரிடம் பரவலாகக் காணப்படுவதை மறுக்க முடியாது.


இந்த மனோபாவம் இருந்ததனால் தான் இளம் வயது மனைவியைப் பெற்றவளுடன் முதிய வயதுடையவளை சம்பந்தப்படுத்திப் பேசும் போதும், சிகப்பு நிற மனைவியைப் பெற்றவனுடன் கருப்பு நிறப் பெண்ணச் சம்பந்தப்படுத்தி பேசும் போதும், இன்னும் பலவிதமான வதந்திகள் கிளப்பப்படும் போதும் இருக்கும், இருக்கும் என்று கூறி ஆமோதிப்பவர்களைக் காண முடிகிறது.


இப்படி ஆமோதிப்பவர்கள் இருப்பதனாலேயே இத்தகைய வதந்திகளைக் கூறவும் முடிகின்றது.


எவ்வளவு ஒழுக்கமானவன் பற்றியும் இப்படிக் கூறி விடலாம் அதை நம்புவதற்கு ஆட்களும் இருப்பார்கள்.


ஆனால் நபியவர்கள் பற்றி அன்று எதிரிகள் இது போன்று அண்ணியப் பெண்ணுடன் சம்பந்தப் படுத்திப் பேசத் துணியவில்லை. அப்படிப் பேசினாலும் எவரும் அதனை நம்பியிருக்கவும் மாட்டார்கள்.


இளம் வயதிலும், முதிய வயதிலும், உயரமாகவும், குட்டையாகவும், பருமனாகவும் மெலிந்தவராகவும் பல மனைவியர் இருந்ததால் அன்னியப் பெண்களை நாடக்கூடிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பதை எதிரிகளும் உணர்ந்தார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனைவி தேவையென்றால் முறையாக உலகுக்குத் தெரியும் வகையில் அறிவித்து விட்டு திருமணம் செய்து கொள்வாரே தவிர முறை கேடாகப் பெண்களை அவர் நாட மாட்டார் என்று எதிரிகளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.


பல மனைவியரை அடைந்ததால் செய்யப்படும் விமர்சனத்தை விட தனக்குச் சம்பந்தமில்லாத அன்னியப் பெண்களை விரும்பினார் என்ற விமர்சனம் மிகவும் கடுமையாக இருந்திருக்கும். இதனால் அவர்களின் தூதுத்துவமே சந்தேகிக்கப் பட்டிருக்கும்.


ஆண், பெண் உறவுகளில் சம்பந்தப்படுத்தி எப்படியெல்லாம் மனித உள்ளங்கள் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை வாசல்களும் அதனால் அடைக்கப்பட்டன. இறைத்தூதர் என்றும் அகில உலக வழிகாட்டி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவருக்கு இது அவசியமானதே என்பதை மறுக்க முடியாது.


இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும், இதை அனுமதிக்கலாமே என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனெனில் நபியவர்களின் சமுதாயத்தில் தோன்றிய எந்த சீர்திருத்தவாதியும் சுயமாக எதையும் கூற முடியாது. நபியவர்கள் சொன்னதை மாத்திரமே அவர் எடுத்துச் சொல்ல முடியும். அவருடைய வாழ்வு சந்தேகத்திற்கு உரியதாகிப் போனால் அவர் தான் ஒதுக்கப் படுவாரே தவிர அவர் எடுத்துச் சொன்ன போதனைகளோ, இறை வசனங்களோ ஒதுக்கப் படுவதில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வு களங்கப்படுத்தப் படாமல் இருக்க அவர்களின் பல திருமணங்கள் கவசமாக உள்ளன. இரு போன்ற நியாயமான காரணங்களினாலேயே நபியவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டார்கள்.


மாற்றார் விமர்சிப்பது போல் காம வெறி காரணம் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.


சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காம வெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.


அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.


காம வெறி தான் காரணம் என்றால் காம வெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.


காம வெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.


காம வெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.


காம வெறி தான் காரணம் என்றால் காம வெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டனியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப் படும்.


தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காம உணர்வு இருக்கப் போகின்றது?


பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காம வெறி இருக்க முடியும்?


இயல்பிலேயே காம வெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.


இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

No comments:

Post a Comment