Digital Time and Date

Welcome Note

Monday, April 16, 2012

திருந்தவேமாட்டார்களா? இந்த தமிழ் சினிமா அரசியல்வாதிகள்...

 

தொடர்ந்து நசிவை எதிர் நோக்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை உயிர்ப்பிக்க ஏதேனும் வழி வாய்ப்புள்ளதா என்று யோசிக்காமல், மேலும் மேலும் அத்துறையை எப்படி சீரழிக்கலாம் என்கிற சிந்தனையிலேயே இருக்கிறார்கள் - திரையுலகிற்குள் நுழைந்துள்ள புது பணக்காரர்கள்... இது பல்லாயிரம் சாமானிய தொழிலாளர்கள் உள்ள துறை என்பதை மறந்து.
ஒரு வழியாக எந்திரன் ஜுரம் போய் விட்டது. நல்ல வேளையாக அது சாதாரண ஜுரம் என்கிற அளவிற்கே தமிழர்களை பீடித்தது. சரியான விழிப்புணர்வுடன், மக்கள் சுதாரித்து கொண்டு இருந்ததால் எந்திரன் திரையரங்குகளில் ஈயாட துவங்கியதில் மகிழ்ச்சி. எந்திரன் வாங்கி திரையிட்ட எந்த திரையரங்கமும் மகிழ்ச்சியில் இல்லை. வெற்றி, வெற்றி என்று பத்து இருபது பேரை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, சாதாரண ஸ்டாராக இருந்தாலும் சரி - ஐம்பது பேர் திரையரங்கில் இருந்தாலே நல்ல கூட்டம் என்கிறார்கள். இது தான் தமிழ் திரையுலகின் யதார்த்த நிலை.
இதை புரிந்து கொள்ளாமல் இன்னொரு கூட்டம், அடுத்த ஜுர கிருமியை விட தயாராகி உள்ளது. அது பற்றிய இணைய தகவல். "கடந்த ஜூலை 31 ஆம் நாள் மலேஷியாவில் எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடந்தது.இதில்..கலாநிதி மாறன்,ஷங்கர்,ரஜினி,ரஹ்மான்,வைரமுத்து, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் தமிழ்ப்பட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.நிகழ்ச்சி சன் டீவியிலும் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரெட் ஜயண்ட் மூவீஸ் தயாரிக்கும் மன்மதன் அம்பு படத்தில்.. கமல்,திரிஷா நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. எந்திரன் படத்தைப் போல பெரிய அளவில் பிரம்மாண்டமாய் நிகழ்ச்சியை நடத்த உள்ளனராம் தயாரிப்புத் தரப்பு.இப்படம் தெலுங்கு,ஹிந்தியிலும் டப் செய்யப் படுகிறது.
எந்திரனைவிட ஒரு திரையரங்கிலாவது அதிகமாக இப்படத்தை வெளியிட உள்ளனராம்.இதற்கான விளம்பரத்திற்கு பல கோடிகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
இப்படத்தின் இசை சிங்கப்பூரில் எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20ஆம் நாள் நடைபெற உள்ளது.விழாவில் நாயக,நாயகியர்,இயக்குநர்,இசை அமைப்பாளர்,தயாரிப்பாளர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் நிகழ்ச்சியில் பாடல்களை மேடையில் பாட வைக்கிறார்.
இவ்விழா நடைபெறும் முன் தினம் சென்னையிலிருந்து ஒரு சொகுசு கப்பலில் 500 ரசிகர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறாராம் தயாரிப்பாளர் (இசை வெளியீட்டு விழாவிற்கும் கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்று கூட்டம் சேர்ப்பது போல சேர்க்கும் நிலை இனி வந்துவிடும் போல உள்ளது!!) நிகழ்ச்சிகளை கலைஞர் டீவியில் ஒளி/ஒலி பரப்பப்படுமாம்."
யாரோ ஒருவர் இப்படி போட்டி போடுகிறார் என்றால் பத்தோடு ஒன்று என்று விட்டு விடலாம். மாநிலத்தின் துணை முதல்வரின் மகனின் படம் எனும்போது, நாம் பகுத்தறிவுடன் சில கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது. பெரிய பெரிய பகுத்தறிவாளர்கள் எங்கு தூங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போட்டி எது எதில் இருக்க வேண்டும் என்கிற விவஸ்தை வேண்டாமா. பணத்தை அழிப்பதில், மனிதர்களை முட்டாளாக்குவதில் போட்டியா. போட்டி எதில் இருக்க வேண்டும்.
முதல்வரின் குடும்பத்திற்கு மாநிலத்தை செழுமையடைய செய்ய, பிற மாநிலத்தோடு ஒப்பிட்டு வளர்ச்சியடைய செய்ய வேண்டும். என்பதில் போட்டி, வேகம் இருக்க வேண்டும். தமிழகமே இரண்டரை வருஷமாய் மின் தடையால் சிக்கி தவிக்கிறது. மின்தட்டுப்பாடு எல்லா மாநிலங்களில் உள்ளது என்கிற ஜால்சாப்பு வேறு. மின்தடையே இல்லாத ஒரு மாநிலமும் இந்தியாவில் உள்ளது. அங்கு தான் மதுவிலக்கும் அமலில் உள்ளது.
அவர்களோடு போட்டி போட்டு மின் வளர்ச்சியை எட்டுவார்கள், மது விலக்கை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால், சினிமா படம் எடுக்க போட்டி போடுகிறார்கள். என்னத்தை சொல்ல

No comments:

Post a Comment